FOURTH ESTATE

r%f mf;fiwAld; ePq;fSk; xU nra;jpahsuhf>ePq;fs; ve;j %iyapy; ,Ue;jhYk; cq;fs; vz;zq;fis ,q;Nf gjpT nra;ayhk;..! tuNtw;fpNwhk;.. nra;jpfs; njhlh;ghd tPbNahf;fs; A+l;A+g; jsj;jpy; cs;sd.!

திங்கள், 31 அக்டோபர், 2011

புயலின் மறுபக்கம்.!

பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.

மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.

மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்..,

வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,
‘நகரத்தின் இயக்கத்திற்கும்,தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது இந்த இடம்தானா..?’

நொடியில் மாறும் திரைப்படக் காட்சிபோல ஒரேநாளில் இந்நகரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது எது..?

மதக்கலவரத்தின் கோரமுகம் நிதர்சனமாய் முகம் காட்ட,மேனியெங்கும் சிலிர்த்து அடங்கியது தேவகிக்கு..

காலையில் நடந்த கலவரத்தில் உறவுகளைப் பலி கொடுத்த அப்பாவிமக்களில் ஒருத்தியாக,தனது கணவனைப் பறிகொடுத்தவளாக..இப்போது அரசு மருத்துவமனை வளாகத்தில்,கணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை முன்பு காத்திருக்கிறாள்..

அந்த மருத்துவமனையில்,உயிரற்றுப் போன நகரத்தின் அமைதிக்கு எதிர்மாறாய் சந்தடிகள் நிறைந்திருந்தது.அனால் அதில் உற்சாகக்குரல்களோ, உவகைத் துடிப்புகளோ எதுவுமின்றி திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியும் கேவல்களுமாய் மனிதர்கள்..

இன்று காலையில் வழக்கம்போல “போய்வருகிறேன்”என்று வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வழயிலேயே மடக்கப்பட்டு,வெட்டிக் கொல்லப்பட்டதும்.கை,கால்,கழுத்து என பல இடங்களும் சின்னாபின்னமாய் இருந்த உடலை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து வந்ததும்,யாரோ இயக்கிவைத்தது போலஅடுத்தடுத்து நடந்து முடிந்திருந்தது.

வாய்விட்டு கதறி அழுது புரண்டதில் தொண்டையும் உடம்பும் வலித்தது.
பிணவறை முன்பு நின்று வெகுநெரம் அழுது ஓய்ந்தபின்,சற்றுத்தள்ளி பிரம்மாண்டமாய் விருப்பு வெறுப்பின்றி எல்லாதிசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த அந்த மரத்தின் நிழலுக்கு வந்து,குத்துக்காலிட்டு,அதில் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டாள் தேவகி.
அவ்வப்போது கணவனின் நினைவுகள் வந்து மனதைப் பிழிய முதுகு குலுங்கி அழுவதும்,சமனப்படுவதுமாயிருந்தாள்.

நாசக்கேடான இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் விடியும் என்று அவள் கனவிலும் கண்டதில்லை. “நீ நாசமாத்தாண்டி போவே...” அம்மா ஆத்திரம் கொப்பளிக்க கத்தியது நினைவுக்கு வந்தது.
தான் காதலித்தவனையே மணக்கப்போகும் உறுதியை பெற்றோரிடம் தெரிவித்தபோது அம்மா கொடுத்த ஆசீர்வாதம்..அதுதான் பலித்துவிட்டதா..? இப்போது என்நிலையை அறிந்து சந்தோஷப்படுவாளோ..? ஜெயித்தது அவளின் சாபமல்ல..யாரோ சிலரின் சுயநலம்தான் என்று உணர்வாளா..?.”
அப்பாவிற்கும் அம்மாவிற்கும், அண்ணனின் நண்பனாய் அறிமுகமாயிருந்த இவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னது பிடிக்கவேயில்லை.அண்ணாவிடம் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. “அவனும் உன்னைக் காதலிக்கிறானா..?”
“ஆமாண்ணா..”
நிஜமாவா..?…ஹ{ம்..படிக்கும் காலத்திலிருந்து அவனை நல்லாத் தெரியும்..” அவன் அப்படி எந்தப் பெண்ணிடமும் பழகமாட்டானே..”அவன் குரலில் நீங்காத ஆச்சரியம்.
“அவரா ஒண்ணும் இதை ஆரம்பிக்கலை..நானாத்தான் அவரை விரட்டி,மிரட்டி என் காலை தெரிவிச்சேன். அவரும் எத்தனையோ காரணம் சொல்லி மறுத்துப் பார்த்தாரு.ஆனா நான்தான் விடாப்பிடியா இருந்து என் காதலை ஏத்துக்கிறதுக்கான நியாயங்களைச் சொல்லி சம்மதிக்க வெச்சேன். இப்ப அவரும் என்னைத் தீவிரமாக் காதலிக்கிறாரு…”
அண்ணன் சில விநாடிகள் என் முகத்தை ஆழமாகப் பார்த்தான்.சாதகமான பதிலை எதிர்பார்த்து படபடப்போடு அவன் கண்களையே பார்த்திருந்தேன். அவனுடைய கொள்கைகளுக்கும்,நேர்மைக்கும் சோதனையாக நான் இப்போது அவன் முன் நின்றிருக்கிறேன்.
அவனுடைய கல்லூரிக் காலத்திலிருந்தே,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கல்லூரி விழாக்களிலும்.பொதுமேடைகளிலும் கனல்தெறிக்கப் பேசிப் பழகியிருந்தான்.அந்த ஆவேசம் குன்றாதவாறு கடடுரைகளும் எழுதி பத்திரிகைகளுக்கும் அனுப்பிவந்தான்.இவையெல்லாம்தான் எனக்கு தைரியமளித்ததோ.. தெரியவில்லை..,
அண்ணன் என்னை ஏமாற்றவில்லை.ஒரு புன்சிரிப்பு மூலம் என்வயிற்றில் பாலை வார்த்தான்.“வாழ்த்துக்கள்..தேவகி…!” என்றவன் “அதான் அந்த ராஸ்கல் முன்னமாதிரி இங்கே வர்றதில்லையா..? நானா வலியப்போய் பேசினாலும் முகம்பார்த்து பேசாம..எங்கேயோ பார்த்துட்டு பேசறானா..? ஹ{ம் கவனிச்சிக்கிறேன் அவனை..”நட்பின் அதீத உறவில் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.
“சரி தேவகி..மேற்படி என்ன செய்யப்போறே..?
“நாங்க சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கப்போறோம்.நீதான் சப்போர்ட் பண்ணனும்.”
அண்ணன் ஆதரவாய் என் கையைப்பிடித்துக் கொண்டான்.

அம்மா,அப்பாவின் எதிர்ப்பைமீறி,எனது கல்யாணத்தின்போது ரிஜிஸ்டர் ஆபிசில் சாட்சிக் கையெழுத்தும் போட்டு,சென்னையிலிருந்து கோவைக்கு கூட்டிவந்து நண்பர்கள் மூலமாய் வீடும்,கணவனின் வேலையையும் இங்கேயே மாறுதலாக்கித் தந்தது என மளமளவென்று எல்லா ஏற்பாடுகளையும் அண்ணனே முன்னின்று செய்து தந்தான்.

அம்மாவோ இங்கு வீடுதேடிவந்து,மண்வாரித் தூற்றிப் போனாள். “நீ நாசமாத்தாண்டி போவே…”, அண்ணன்தான் “ கொஞ்சநாள் கழித்து எல்லாம் சரியாகும்.அதுவரை அம்மா அப்பாவை நீ பொருட்படுத்தாதே.”என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான்.
இப்போது அவனுக்கு சேதி தெரிந்தால் எப்படித் துடித்துப்போவான்.தங்கையின் விருப்பத்திற்காக பெற்றோரிடம் சண்டை போட்டவனாயிற்றே.வாழ்நாளெல்லாம் தேவகியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்ற உறுதியை தன்கணவன் சார்பாக எடுத்துச் சொன்னவனாயிற்றே..வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழத்துடித்தவர்கள் இப்படிப்பட்ட கலவரப்புயலுக்குள் மாட்டுவார்கள் என்று அண்ணன் எதிர்பார்த்திருப்பானா..? பாவம்.., நேற்றுவரை..ஏன் இன்று காலைவரை தேவகியேகூட அப்படி நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது திக்குத்தெரியாத காட்டில் தனித்துவிடப்பட்ட குழந்தையாய் மிரண்டுபோயிருக்கிறாள்.

அடுத்தது என்ன..? என்று யோசிக்கக்கூட திராணியற்று மனம் முழுவதும் மரத்துப் போயிற்று.அவளுடைய இரு கன்னங்களிலும் ஒழுகிக் காய்ந்திருந்த கண்ணீர்த் தடங்களில்,அப்பியிருந்த புழுதியை முந்தானையால் துடைத்தவளாய் தன்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரமாயிற்று என்று தெரியவில்லை.காலையில் இந்த அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தபோது,இருந்த மனிதர்களின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு பெருகியிருந்தது.
அத்தனையும் கலவரத்தில் இறந்தவர்களின் உறவு ஜனங்கள்.குல்லாவும் தாடியும் கைலியுமாய், காவிவேட்டி கறுப்பு வெள்ளை வேட்டி பேண்ட் சட்டைகளுமாய் ஆண்களும்,வண்ணவண்ணப் புடவைகளும்,உடல் மறைத்த அங்கிகளுமாய் பெண்களும், கலந்து நிரவியிருந்த அத்தனைபேரின் முகங்களிலும் ஒரேமாதிரியான இழப்பின்சோகம் மண்டியிருந்தது.
எல்லோரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் பொது எதிரியாய் வெயில் உச்சிக்கு ஏற,ஏற தேவகி அமர்ந்திருந்த மரத்தின் நிழல் குறுகியது.விலாசமாய் அமர்ந்திருந்த ஜனக்கூட்டமும் அதற்கேற்றவாறு இடைவெளியின்றி நெருக்கமானது.

“ஏம்மா..நானும் அப்போதிருந்தே பாக்குறேன்.நீ தனியா உட்கார்ந்து அழுதிட்டிருக்கிறே..சொந்தக்காரங்க யாரும் வரலையா..?”குரலில் பரிவுடன் உடல் முழுவதும் கறுப்புஅங்கியால் மறைத்திருந்த ஒரு பெண் தேவகியிடம் கேட்டாள்.

“இல்லை.எல்லாரும் வெளியூரு..தகவல் சொல்லியிருக்கு.அவங்களாலே எப்ப வரமுடியும்னு தெரியலே..”
“இங்கே வாழ்க்கைப்பட்டு வந்தியா..?”
“ஆமா”
“உன்புருஷனோட சொந்தம் யாரும் இங்கே இல்லையா..?”
“இல்லை”
அந்தப் பெண்ணின் கண்களில் லேசாசாய் மிரட்சி.ஏதோ உண்மையை யூகித்தறிந்தவள் போல..”அப்போ..இங்கே..இறந்தது…?” குரல் தயக்கத்தோடு தடைபட்டு நின்றது.மீதிக்கேள்வியை கேட்பதில் உள்ள தர்மசங்கடம் தேவகிக்குப் புரிந்தது.
“என் புருஷனைத்தான் கொன்னுட்டாங்க..”சொல்லும்போதே தேவகிக்கு குரல் அடைத்து கண்ணீர் பொங்கியது.
அந்தப்பெண் சட்டென தேவகியின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்டு, “என்னம்மா செய்யிறது,இந்தப்படுபாவிங்க எப்போப் பார்த்தாலும் பழிக்குப்பழின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வெட்டிச் சாய்ச்சுட்டே இருக்கானுங்க.நம்பளைப் போல பொம்பளைங்க,குழந்தைகள் எல்லாம் இப்படி அநாதியா தெருவிலே நிக்க வேண்டியிருக்கு..? உள்@ரிலேயே பொறந்து இங்கேயே வாழ்க்கை நடத்தறவங்களுக்கு ஏதோ ஆறுதல் சொல்லவும் காப்பாத்தவும் யாரோ நாலுபேர் இருப்பாங்க..ஆனா வெளியூரிலிருந்து பிழைக்க வந்தவங்க கதியெல்லாம் இன்னும் கஷ்டம்..,பரிவுடன் சொல்லிக்கொண்டே வந்தவள்,திடீரென்று ஆவேசமுற்றவளாய்,சற்று இரைச்சலுடன் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்த நாயாவது இதையெல்லாம் நெனச்சுப்பாக்குதா..? என்னம்மா நான் சொல்லுறது..? மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?”
“ஹே..பாத்திமா..”ஏதோ ஒரு ஆண்குரல் அதிகாரத்தோடு, ‘வாயை மூடு’ என்ற தொனியில் ஒலிக்க,முனகிக் கொண்டே எழுந்து சென்றாள் அந்த மாது.
அவள் சொல்லிச் சென்றதைக் கேட்டபோது தேவகிக்கு ராமச்சந்திரன் சாருடைய நினைவு வந்தது.தான் ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் வகுப்பெடுத்த வரலாற்று ஆசிரியர்.அவர் ஒருமுறை சொன்னார். “மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த அதே காலம்,மேலும் இருபிரிவு ஆரியக்கூட்டம்,ஒன்று ஈரானுக்குள்ளும்,மற்றொன்று கிரீஸிற்குள்ளும் நுழைந்தது.இந்தியப் பழங்குடி மக்களிடம் போரிட்டும்,இணைந்தும் வாழ்ந்து பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எப்படி இந்துசமயத்தின் முன்னோடியான வைதீக வேதமதத்தை உருவாக்கிற்றோ,அதே போல் ஈரானுக்குள் நுழைந்தவர்களின் சந்ததியாய்த்தான் கிறித்தவமும்,இஸ்லாமும் உருவாயிற்று.
அப்படியானால் நமக்கெல்லாம் ஒரே மூதாதையர்கள்தான்.எனவே மதத்திற்காக சண்டைபோடுவதும் கொலைபுரிவதும் கூடாது.”என்று சொன்னவர்.மேலும் இந்தியாவில் தோன்றிய மதமான பௌத்த மதத்தை உலகில் பல நாட்டுமக்கள் பின்பற்றி வரும்போது,வேறு பகுதியில் தோன்றிய இஸ்லாமையும், கிறித்துவத்தையும் இங்குள்ள மக்கள் சிலர் தழுவுவதில் தவறு ஏதும் இல்லை.எனவே மதத்துவேஷம் என்பது கூடாது…”
அன்று அவர் சொன்னது மனதில் செதுக்கிவைத்த சித்திரமாயிற்று. நினைவுகளில் மூழ்கியிருந்த தேவகியை, “ஐயோ நசீரு…”என்ற கூக்குரல் திடுக்கிடவைத்தது.
மருத்துவமனையின் பெரியநுழைவாயில் வழியே ஒரு போலீஸ் வேன் வந்து நின்றிருக்க.அதிலிருந்து ஆண்களும்,பெண்களுமாய் கதறிக் கொண்டே பிணப்பரிசோதனை அறைவாயிலை நோக்கி ஓட்டமெடுக்க,எல்லோரின் கண்களும் அவர்களையே பின் தொடர்ந்தன.தொடர்ந்து பரிதாப உச்சுக் கொட்டலும்,பாவிகள் எனத் தொடங்கிய வசவுகளும் காற்றில் கலந்து நிறைந்தன.

தேவகி இங்கு வந்து அமர்ந்தபின்,நான்கைந்துமுறை இதேபோல உறவுக் கூட்டங்களை போலீஸ்வேன் கொண்டுவந்து இறக்கிப்போயிற்று.ஒவ்வொரு முறையும் அதிலிருந்து இறங்கும் மனிதர்கள்..இப்படித்தான் கூக்குரலிட்டுக் கொண்டு,தலையிலடித்துக்கொண்டோ,வாய்விட்டுக் கதறிக்கொண்டோ, பிணவறையை நோக்கி ஓடுகிறார்கள்.அவ்வப்போது அவர்களால் உச்சரிக்கப்படும் பெயர்கள் மட்டும் வௌ;வேறாயிருக்கும்.

காலையில் “அப்படித்தான் செந்திலு..என் ராசாவே..” என்று கதறிக் கொண்டே ஓடிவந்த ஒருதாய்,பதட்டத்தாலோ பட்டினியாலோ..தடுமாறிக் கீழே விழப்போக தேவகிதான் சுதாரித்து,சட்டென எழுந்து தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.உறவு ஜனத்தில் நான்கைந்துபேர் சுற்றிக் கொள்ள சோடா வாங்கு..தண்ணி எடு..என்று ஆள்ஆளுக்கு கூவ,யாரோ ஒருவர் வெளியே ஓடிப்போக எத்தனித்து..அப்படியே நின்றார். ‘ஒரு கடையும் திறந்திருக்கவில்லை’ என்பது அப்போதுதான் உறைத்திருக்கவேண்டும்.அவர் முகத்தில் ஆத்திரமும் இயலாமையும் கொப்பளிக்க முனகிக்கொண்டே திரும்பினார்.

அதற்குள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் ஓடிப்போய் சைக்கிளில் மாட்டியிருந்த தன்பைக்குள் கைவிட்டு ஒருபாட்டில் தண்ணீரை எடுத்துவர,அதை ஒருவர் வாங்கி மயக்கமுற்ற பெண்ணின் முகத்தில் தெளித்து,வாயை திறக்கச்செய்து சற்றே புகட்டியபின்,அந்தப் பெண்ணுக்கு உணர்வு திரும்பியது.
“இந்தாங்க பாய்… நன்றி” என்று லேசான புன்னகையுடன் ஒருவர் பாட்டிலைத் திருப்பித்தந்தார்.
புpணவறைக்கு வெளியே நின்றிருந்த கூட்டம் மெதுவாக கலைந்து,நிழலுக்கு ஒதுங்கியது.தேவகி இன்னும் சற்று ஒடுங்கி உட்கார்ந்து கொண்டாள்.

“ஏனுங்க பாய்..பாடியெல்லாம் எப்பக் குடுப்பாங்களாம்..?” தேவகியிடமிருந்து சற்றுத்தள்ளி நின்றிருந்த கறுப்புவேட்டி மனிதர் கேட்டார்.பிணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த தேவகி உட்பட,பலரது கவனமும் அவருடைய கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தது.

மரத்திற்கு பின்புறமிருந்து பதில்குரல் வந்தது. “ எல்லாம் ஆச்சு சாமி..இன்னும் கொஞ்சநேரத்திலே யாரோ பெரிய அதிகாரி வருவாராம்.வந்தவுடனே பாதுகாப்பா எல்லா பாடியும் கொண்டுபோக ஏற்பாடு பண்ணுவாங்களாம்..”
“சொந்தஊருக்கு பாடியை கொண்டுபோறவுங்க எல்லாம் என்ன பண்றது.? ”
“எங்கே கொண்டுபோறது..அவங்கவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு கொண்டுபோக வேண்டியதுதான்.அங்கதான் பக்கம்பக்கமாய் எல்லா ஜாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே..”
“ஓஹோ..அப்படியா..ஏற்பாடு.?” ஏதோ சில விநாடிகள் யோசித்த கறுப்புவேட்டி மனிதர், “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடற மத்தவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா பாய்..?”அவர் குரலில் அங்கலாய்ப்பும் வருத்தமும் இழைந்தன.

“எல்லாருக்கும் ஆறடி மண்ணு தவிர கடைசியிலே சொந்தமா எதுவுமேயில்லேங்கிறது புரிஞ்சாலே போதுமே..!” அலுப்பும் சலிப்புமாக வந்தது அந்தக் குரல்.
தொடர்ந்து, “ஆமா ஐயப்பசாமியெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு வரக்கூடாதே..”
“செத்தது நம்ம நெருங்கிய சொந்தக்காரப் பயலாச்சே..எப்படி வராம இருக்கிறது.இனி மாலையைக் கழட்டிட வேண்டியதுதான் பாய்..அடுத்தவருஷம்தான் மலைக்குப் போகனும்..” தொடர்ந்து அவர்களின் பேச்சு வௌ;வேறு திசைக்குப் பயணிக்க…”தேவகியின் கவனம் அவர்களின் பேச்சுககளிலிருந்து மீண்டது.
வெகு நேரம் ஒரேமாதிரியாக அமர்ந்திருந்ததில், கால்களில் வலி எடுக்கத் துவங்கியது.வெயிலின் உக்கிரம் கண்களைக்கூச,கைகளை தளர்த்திக்கொண்டு மரத்தின்மீது நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.பிணங்களை வெளியே கொண்டுவரும்வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான்… “கணவன் உயிரோடு இருக்கும்போது,இப்படி எதற்காகவும் தன்னைக் காத்திருக்க வைத்ததில்லை.காதலித்துக் கொண்டிருந்த ஒருவருடமும் சரி,மணம் முடித்தபின் இந்த ஆறுமாதங்களும் சரி..இரவு ஒன்பது மணிக்கு வருவேன் என்று சொல்லிச்சென்றால் பத்துநிமிடம் முன்பாகவே வந்து நிற்பான்.
காதலித்த காலத்தில் என்றால் ஒருநாளும் இவள் அவனுக்காக காத்திருந்ததேயில்லை.ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று நேரத்தையும், இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு,இவள் வேண்டுமென்றே,நாலரை மணிக்கு சென்றாலும் அவன்தான் இவளை வரவேற்றிருக்கிறான்.இப்படி எத்தனையோ முறை.!
கடந்த காலத்தை அசைபோட்டபடியே..நினைவுகளில் மூழ்கிப்போனாள்…
யாருடைய துயரத்தையும்,சந்தோஷத்தையும் பொருட்படுத்தாது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
தேவகிபோலவே எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்தப் பெரிய அதிகாரி மருத்துவமனைக்கு வந்தபோது மதியம் இரண்டு மணியாகிவிட்டது.
அவரைச் சுமந்து வந்த ஜீப் நின்றவுடன்,ஜனக்கூட்டம் ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டது.அவர் எல்லோரையும் கையமர்த்திவிட்டு,உடன் வந்த போலீசாரிடம் ஏதோ சொல்ல,இரண்டு போலீசார் பிணவறையை நோக்கி ஓடினர்.வேறு சில போலீசாருக்கும் ஏதோ கட்டளைகள் பிறப்பித்தார்.
உடனே அங்கு சூழ்நிலை பரபரப்பாயிற்று.பிணவறையிலிருந்து ஒரு பிணத்தை வெளியே கொண்டுவந்து புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்திற்கு அருகே இருந்த தாழ்வாரத்தில் கிடத்தினார்கள்.
மீண்டும் உள்ளே சென்று இன்னொரு பிணத்தை…,இன்னும் ஒன்று…ஆயிற்று..,மொத்தம் பதினேழு பிணங்கள்..,

உறவினர்களின் அழுகுரல்கள் உச்சத்தைத் தொட்டது.வயிற்றிலும் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அலறும் சப்தம்.அந்த மருத்துவமனை முழுக்க எதிரொலித்தது.
அந்தப்பெரிய போலீஸ் அதிகாரி;,அழுது கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தியபடியே,இறந்தவர்களைப்பற்றிய விபரங்களை தனது கையிலிருந்த நோட்டு ஒன்றில் எழுதிக்கொண்டே வந்தார்.
தேவகியின் முறையும் வந்தது. “ உங்கபேர் என்னம்மா..?”
“தேவகி”
“இறந்தது யாரு..?”
“என் புருஷன்”
“வயசு.?”
“இருபத்தெட்டு”
“பேரு..?”
“அப்துல் காதர்.”
“என்ன..என்ன சொன்னீங்க..?”
“என் கணவர் பெயர் அப்துல் காதர்..”இம்முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தேவகி.

-பொள்ளாச்சி அபி -
1998

செவ்வாய், 11 அக்டோபர், 2011

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.


FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.



இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.




ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.


இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).


ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?



ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:


நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.

நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)


100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.


3000 x 100 = 300000 ரூபாய்


அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)


இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.




இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய
அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.!
கோவைமாவட்டம் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதையொட்டி, இம்மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு,இங்கு மருத்துவக் கல்லூரியையும் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை தெற்குமாவட்டத்தில் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை மட்டுமே தற்போது மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.இதன்மூலம், பொள்ளாச்சி, உடுமலை,வால்பாறை,கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.நாள்தோறும் 2 ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால்,இம்மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீனவசதிகள் எதுவுமில்லாததால்,சாதாரணமான சில நோய்கள் தவிர,விபத்து, சிக்கலான பிரசவம்,உள்ளிட்ட பெரும்பாலான சிகிச்சைகளுக்கு,கோவை அரசுமருத்துவமனைக்கே பரிந்துரை செய்யப்படுகிறது.இதனால் அரசுமருத்துவமனையை நாடிவரும் ஏழைநோயாளிகள்,பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்துவருகிறது.
இதனையடுத்து,பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில்,நவீனகருவிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்ததையடுத்து இம்மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு,கடந்த மேமாதம் அரசுஆணை வெளியிடப்பட்டது.
அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் இடவசதி தேவைப்படும் நிலையுள்ளதால்,தற்போது இம்மருத்துவமனை யின் அருகில் செயல்படாதநிலையில் உள்ள,சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நகராட்சி மகளிர்மேல்நிலைப் பள்ளிவளாகத்தையும்,இதன் அருகிலேயே முக்கால் ஏக்கர் பரப்பளவிலான பாலகோபாலபுரம் பள்ளிவளாகத்தையும் இணைத்து,அரசு மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்பட்டு,மாவட்டத் தலைமை மருத்துவமனையாக,பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்படும் நிலை ஏற்பட்டால்,500 படுக்கைவசதிகளுடனும்,சி.டி.ஸ்கேன்,விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு,எலும்பு,நரம்பியல்,கண்,காது,மூக்கு தொண்டைப்பிரிவு,மகப்பேறுக்கு முன் மற்றும் பின்கவனிப்பு மருத்துவப்பிரிவு,இருதயநோய்,லேப்ராஸ்கோப்பிக்குடன் கூடிய நவீன அறுவைசிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட 30.க்கும் மேற்பட்ட சிறப்புமருத்துவப்பிரிவுகளுடன் இம்மருத்துவமனை செயல்பட வாய்ப்புள்ளது என்றும்,அரசுமருத்துவக்கல்லூரியாக இயங்க வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,வணிகவளாகம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.நகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,பொதுமக்களின் நலன் கருதி,இதனை நிறுத்திவைக்கவேண்டும் என்றும்,மாவட்டத்தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகஅரசு முன்வரவேண்டும் என்பதே, அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்,தொழில் வர்த்தகசபை,வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


செவ்வாய், 14 டிசம்பர், 2010

போதையின் பாதையில் பொள்ளாச்சி..!


பொள்ளாச்சி.டிச.14.கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,கடந்த சில மாதங்களாக வலிநிவாரணிகளாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் மருந்துகளை,போதை மருந்துகளாகப் இளைஞர்கள் பயன்படுத்துவதும்,சமூக அக்கறையின்றி அவர்களிடையே இம்மருந்துகளை விற்பனை செய்து சிலர் லாபம் பார்ப்பதும் அதிகரித்துவருகிறது.காவல்துறையின் கையில் இக்குற்றவாளிகள் சிலர் சிக்கினாலும்,தொடர்கண்காணிப்பும்,கடுமையான தண்டனைகளையும் அளிக்க தமிழகஅரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே தற்போது, சமூகஆர்வலர்களின் உரத்தகுரலாகவும் இப்பகுதியில் ஒலித்துவருகிறது.

மருத்துவத்துறையில்,அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்பொழுது வலிநிவாரணிகளாக மார்ப்பின்,பெத்தடின்,கீட்டமைன்,பெனார்கன்,மற்றும் ஃபோர்ட்வின் போன்ற மருந்துகள் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் நோயாளிகள் மயக்கத்திலாழ்ந்து வலியிலிருந்து விடுபடுகின்றனர்.
ஆனால் இம்மருந்துகள் தரும் மயக்கத்தை,போதையாகக் கருதி,தற்போது உபயோகித்துவரும் நபர்களின் எண்ணிக்கையும்,இதனை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் பொள்ளாச்சியில் அதிகரித்துவருகிறது.
பொள்ளாச்சி,கோவை,சென்னை,திருச்சி மற்றும் கேரளமாநிலத்திலிருந்தும் சிலரால்,மொத்தமாக வாங்கிவரப்படும் இம்மருந்துகள்,சொகுசுக்கார்களில் வைத்தும்,நகரத்தையொட்டி, ஆளரவமற்றும், கண்காணிப்பும் அற்ற இடங்கள், மயானங்கள்,ஆகிய பகுதிகளில்வைத்தும், வாடிக்கையான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்வதும்,ஊசிகளாகப் போடுவதும் நடைபெற்று வருகிறது.
இம்மருந்துகளை தொடர்ந்து உபயோகிப்பதால்,மூளையின் செயல்திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு,தங்களுக்கு போதைமருந்துக்கான பணத் தேவைக்காக,இம்மருந்துகளுக்கு அடிமையானவர்கள் கொலைகூட செய்யத் துணிவார்கள் என்ற பகீர்த் தகவலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எய்ட்ஸ் உட்பட ஆட்கொல்லி நோய்களுக்குள்ளாகும் ஆபத்துகளும் அதிகம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் போதை மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்திக் கொள்ளும் இளஞர்களும், இம்மருந்துகளை விற்பனை செய்ததாக சிலரும் என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எட்டுபேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றுள்ளனர்.இவர்களிடமிருந்து இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பொள்ளாச்சி பகுதியிலுள்ள மருந்து விற்பனைக்கூடங்களில்,மருத்துவரின் கையொப்பமில்லாத சீட்டுகளுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்யக்கூடாதென போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால்,இளையசமுதாயத்தை சீர்குலைக்கும் போதைமருந்து விற்பனையாளர் களுக்கும்,அதனை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடுமையான தண்டணைகள் இல்லாவிட்டால்,மீண்டும்,மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபடும் வாய்ப்புகளே அதிகம். எனவே,தமிழகஅரசின் அக்கறையும்,காவல்துறையின் கடுமையான கண்காணிப்பும்,தண்டணைகளுமே இப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வாசிப்போம்..சாதிப்போம்..!


வாசிப்போம்... சாதிப்போம்...!
சுசி திருஞானம்







நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின். நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.

காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது.
அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.
கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.
நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.
இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன்.அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை.

புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள். இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள்.
தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும். உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!

நன்றி தினமணி நாளிதழ்

போதை எனும் புதைகுழியில்..!

போதை எனும் புதைகுழியில்...

ப.செ. சங்கரநாராயணன்First Published : 07 Aug 2010

தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.
புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.
முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.
ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.
தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.
கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.
"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.
1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் | 139 கோடி. இப்போதைய நிலவரப்படி 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா..?
பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.
"குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.
"பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.
ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்...!
கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!
ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.
குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.
"சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.
"படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!
ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?
இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி.தினமணி நாளிதழ்,

மனசாட்சி பேசக்கூடாதா.?

மனசாட்சி பேசக்கூடாதா?

சா.ஜெயப்பிரகாஷ் First Published : 10 Aug 2010

தமிழ்நாட்டிலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு (சம்பளம், படிகள், சலுகைகளுக்காக) என்ன தெரியுமா? ரொம்பவும் அதிகம் இல்லை, 12 கோடியே 60 ஆயிரம்தான்.
திருச்சியைச் சேர்ந்த என். மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதால் கிடைத்துள்ள விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மாத ஊதியம் - 8,000, ஈட்டுப்படி- 7,000, தொகுதிப்படி- 5,000, தொகுப்புப் படி- 2,500, தொலைபேசிப்படி- 5,000, அஞ்சல் செலவுப்படி- 2,500, வாகனப்படி- 20,000. ஆக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதத்துக்கு மொத்தம் 50,000.
இத்துடன், எம்.எல்.ஏ. விடுதியில் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு 2.50 அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு சலுகைக் கட்டணத்தில் மாதம் ஒன்றுக்கு 250 மட்டுமே. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துகள் வாங்கியதாக ரசீது கொடுத்தால், அந்தத் தொகை எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்பக் கிடைக்கும்.
நாளொன்றுக்கு படி 500. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவி, பேருந்துகளில் உதவியாளர் ஒருவருடன் இலவசப் பயணம், மேலும் பயணப்படியாக ஓராண்டுக்கு 20,000, இலவச எழுது பொருள்கள் இன்னும் என்னென்னவோ...
தமிழகத்திலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து சராசரியாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளாக ஒரு மாதத்துக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு 12 கோடியே 60 ஆயிரம்.
எப்படி வளர்ந்தது தெரியுமா? கடந்த 1964 மார்ச் 31-ம் தேதி வரை எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வெறும் |150 மட்டும்தான். வேறெந்தப் படிகளும் கிடையாது. அந்த ஆண்டு சம்பளத்தில் 100 உயர்த்தப்பட்டு, 1971 அக்டோபர் 1-ம் தேதி முதல் ஈட்டுப்படியாக |100 சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்தப் படிப்படியான இமாலய வளர்ச்சி. இப்போதைய "ஈட்டுப்படி' 7,000.
1978 முதல் தொடங்கப்பட்ட "தொலைபேசிப்படி' | 150, இப்போது | 5,000 ஆகியிருக்கிறது. 1991 முதல் தொடங்கப்பட்ட "தொகுதிப்படி' 250, இப்போது 5,000 ஆகியிருக்கிறது. 1993-ல் தொடங்கப்பட்ட "அஞ்சல்படி' 250, இப்போது 2,500 ஆகியிருக்கிறது. 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "தொகுப்புப் படி' 2,000, இப்போது | 2,500 ஆகியிருக்கிறது. 2007-ல் தொடங்கப்பட்ட "வாகனப்படி' 5,000, இப்போது 20,000 ஆகியிருக்கிறது.
மொத்தத்தில் 1964, மார்ச் 31-ம் தேதி வரை மாதம் |150 வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், 45 ஆண்டுகளில் "எல்லா வளர்ச்சியும்' பெற்று இப்போது தலா 50,000 பெறுகிறார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு "நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை' என்று பதில் வந்திருக்கிறது. நிதியேதும் நிலுவையில் இருந்தால், மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகத் தகவல் சொல்லி, கடிதம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எடுத்துக் கொள்வார்களாக இருக்கும்.
ஆனால், இந்தத் திருநாட்டில்தான் "எக்ஸிகியூட்டிவ்' நிலையில் பணியில் இருப்பவர்களும்கூட 10,000 ஊதியம் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளம் ஆசிரியர்களுக்கு ஊதியம் இன்னமும் ஆறாயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.
உலகப் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு மாதம்தோறும் 5,000தான் ஊதியம். "தாற்காலிகப் பயிற்சியாளர்' என்பது அவரது பதவியின் பெயர். அவரால் உருவாக்கப்பட்டுள்ள வீரர்களின் மதிப்பு? உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளருக்கு மாதம்தோறும் | 6,000.
ஓர் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி இறந்த திருச்சி செந்தில்குமாருக்கு அரசு உதவி எதுவுமில்லை!
இன்னும்கூர்ந்து கவனித்தால் இந்தப் பட்டியல் நீளும். ஆனால், அதேநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், சென்னையில் வீட்டுமனை... இத்யாதி இத்யாதிகளுடன் இன்னும் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். தொகுதி மக்களை அந்தப் பேரவையில் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான். இங்கே குறிப்பிட்ட சில பிரச்னைகளையும்கூட அவர்கள் பேரவையில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.
சொந்த வீடில்லாத, எந்தவித சொத்தோ, வருமானமோ இல்லாத மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பாளர் மனுவிலேயே பதிவு செய்திருப்பதுபோல லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் கொடுப்பானேன். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபடட்டுமே... இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுவதுபோல, அவர்களது மனசாட்சியும் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நன்றி..தினமணி நாளிதழ்.10.8.2010