FOURTH ESTATE

r%f mf;fiwAld; ePq;fSk; xU nra;jpahsuhf>ePq;fs; ve;j %iyapy; ,Ue;jhYk; cq;fs; vz;zq;fis ,q;Nf gjpT nra;ayhk;..! tuNtw;fpNwhk;.. nra;jpfs; njhlh;ghd tPbNahf;fs; A+l;A+g; jsj;jpy; cs;sd.!

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.

அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய
அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.!
கோவைமாவட்டம் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதையொட்டி, இம்மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு,இங்கு மருத்துவக் கல்லூரியையும் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை தெற்குமாவட்டத்தில் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை மட்டுமே தற்போது மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.இதன்மூலம், பொள்ளாச்சி, உடுமலை,வால்பாறை,கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.நாள்தோறும் 2 ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால்,இம்மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீனவசதிகள் எதுவுமில்லாததால்,சாதாரணமான சில நோய்கள் தவிர,விபத்து, சிக்கலான பிரசவம்,உள்ளிட்ட பெரும்பாலான சிகிச்சைகளுக்கு,கோவை அரசுமருத்துவமனைக்கே பரிந்துரை செய்யப்படுகிறது.இதனால் அரசுமருத்துவமனையை நாடிவரும் ஏழைநோயாளிகள்,பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்துவருகிறது.
இதனையடுத்து,பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில்,நவீனகருவிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்ததையடுத்து இம்மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு,கடந்த மேமாதம் அரசுஆணை வெளியிடப்பட்டது.
அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் இடவசதி தேவைப்படும் நிலையுள்ளதால்,தற்போது இம்மருத்துவமனை யின் அருகில் செயல்படாதநிலையில் உள்ள,சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நகராட்சி மகளிர்மேல்நிலைப் பள்ளிவளாகத்தையும்,இதன் அருகிலேயே முக்கால் ஏக்கர் பரப்பளவிலான பாலகோபாலபுரம் பள்ளிவளாகத்தையும் இணைத்து,அரசு மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்பட்டு,மாவட்டத் தலைமை மருத்துவமனையாக,பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்படும் நிலை ஏற்பட்டால்,500 படுக்கைவசதிகளுடனும்,சி.டி.ஸ்கேன்,விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு,எலும்பு,நரம்பியல்,கண்,காது,மூக்கு தொண்டைப்பிரிவு,மகப்பேறுக்கு முன் மற்றும் பின்கவனிப்பு மருத்துவப்பிரிவு,இருதயநோய்,லேப்ராஸ்கோப்பிக்குடன் கூடிய நவீன அறுவைசிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட 30.க்கும் மேற்பட்ட சிறப்புமருத்துவப்பிரிவுகளுடன் இம்மருத்துவமனை செயல்பட வாய்ப்புள்ளது என்றும்,அரசுமருத்துவக்கல்லூரியாக இயங்க வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,வணிகவளாகம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.நகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,பொதுமக்களின் நலன் கருதி,இதனை நிறுத்திவைக்கவேண்டும் என்றும்,மாவட்டத்தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகஅரசு முன்வரவேண்டும் என்பதே, அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்,தொழில் வர்த்தகசபை,வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


செவ்வாய், 14 டிசம்பர், 2010

போதையின் பாதையில் பொள்ளாச்சி..!


பொள்ளாச்சி.டிச.14.கோவைமாவட்டம் பொள்ளாச்சியில்,கடந்த சில மாதங்களாக வலிநிவாரணிகளாக மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் மருந்துகளை,போதை மருந்துகளாகப் இளைஞர்கள் பயன்படுத்துவதும்,சமூக அக்கறையின்றி அவர்களிடையே இம்மருந்துகளை விற்பனை செய்து சிலர் லாபம் பார்ப்பதும் அதிகரித்துவருகிறது.காவல்துறையின் கையில் இக்குற்றவாளிகள் சிலர் சிக்கினாலும்,தொடர்கண்காணிப்பும்,கடுமையான தண்டனைகளையும் அளிக்க தமிழகஅரசு தக்கநடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே தற்போது, சமூகஆர்வலர்களின் உரத்தகுரலாகவும் இப்பகுதியில் ஒலித்துவருகிறது.

மருத்துவத்துறையில்,அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்பொழுது வலிநிவாரணிகளாக மார்ப்பின்,பெத்தடின்,கீட்டமைன்,பெனார்கன்,மற்றும் ஃபோர்ட்வின் போன்ற மருந்துகள் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் நோயாளிகள் மயக்கத்திலாழ்ந்து வலியிலிருந்து விடுபடுகின்றனர்.
ஆனால் இம்மருந்துகள் தரும் மயக்கத்தை,போதையாகக் கருதி,தற்போது உபயோகித்துவரும் நபர்களின் எண்ணிக்கையும்,இதனை விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் பொள்ளாச்சியில் அதிகரித்துவருகிறது.
பொள்ளாச்சி,கோவை,சென்னை,திருச்சி மற்றும் கேரளமாநிலத்திலிருந்தும் சிலரால்,மொத்தமாக வாங்கிவரப்படும் இம்மருந்துகள்,சொகுசுக்கார்களில் வைத்தும்,நகரத்தையொட்டி, ஆளரவமற்றும், கண்காணிப்பும் அற்ற இடங்கள், மயானங்கள்,ஆகிய பகுதிகளில்வைத்தும், வாடிக்கையான இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்வதும்,ஊசிகளாகப் போடுவதும் நடைபெற்று வருகிறது.
இம்மருந்துகளை தொடர்ந்து உபயோகிப்பதால்,மூளையின் செயல்திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு,தங்களுக்கு போதைமருந்துக்கான பணத் தேவைக்காக,இம்மருந்துகளுக்கு அடிமையானவர்கள் கொலைகூட செய்யத் துணிவார்கள் என்ற பகீர்த் தகவலை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எய்ட்ஸ் உட்பட ஆட்கொல்லி நோய்களுக்குள்ளாகும் ஆபத்துகளும் அதிகம் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும் கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் போதை மருந்துகளை ஊசிகள் மூலம் செலுத்திக் கொள்ளும் இளஞர்களும், இம்மருந்துகளை விற்பனை செய்ததாக சிலரும் என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எட்டுபேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றுள்ளனர்.இவர்களிடமிருந்து இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பொள்ளாச்சி பகுதியிலுள்ள மருந்து விற்பனைக்கூடங்களில்,மருத்துவரின் கையொப்பமில்லாத சீட்டுகளுக்கு இம்மருந்துகளை விற்பனை செய்யக்கூடாதென போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால்,இளையசமுதாயத்தை சீர்குலைக்கும் போதைமருந்து விற்பனையாளர் களுக்கும்,அதனை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடுமையான தண்டணைகள் இல்லாவிட்டால்,மீண்டும்,மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபடும் வாய்ப்புகளே அதிகம். எனவே,தமிழகஅரசின் அக்கறையும்,காவல்துறையின் கடுமையான கண்காணிப்பும்,தண்டணைகளுமே இப்பிரச்சினைக்கு தீர்வு என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

வாசிப்போம்..சாதிப்போம்..!


வாசிப்போம்... சாதிப்போம்...!
சுசி திருஞானம்







நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின். நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தக வாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார் பேரறிஞர் தாமஸ் ஜெஃபர்சன்.

காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபூசியஸ் எழுதிய புத்தகங்கள். 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய "பயணங்கள்' என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது.
அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய "அன்ட்டு திஸ் லாஸ்ட்' புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.
கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன் என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாள்களில் விளக்கினார் காந்தியடிகள்.
நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும், உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும், உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.
நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப்படுபவர் பீட்டர் டிரக்கர். 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.
இத்தனை ஆற்றல்மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். ஒவ்வோராண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக் குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன்.அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை.

புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள். இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள்.
தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துகளையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாள்களில் ஓர் அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துகளை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும். உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும். வாசிப்போம்... சாதிப்போம்...!

நன்றி தினமணி நாளிதழ்

போதை எனும் புதைகுழியில்..!

போதை எனும் புதைகுழியில்...

ப.செ. சங்கரநாராயணன்First Published : 07 Aug 2010

தமிழகத்தில் நீண்டகாலமாக எழுப்பப்படும் கோஷம் "மது விலக்கு'. இளைஞர்களின் இப்போதைய கொண்டாட்டங்களில் "மது விருந்து' தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது.
புத்தாண்டு மற்றும் பண்டிகை, திருவிழாக்களின்போது களைகட்டும் பார்ட்டிகளால் மது விற்பனையில் புதிய சாதனை படைக்கப்படுவதே இதற்குச் சான்று.
முன்பெல்லாம், திரைப்படங்களில் கதாநாயகன் சோகமாக இருக்கும்போது மது அருந்துவதாகக் காட்சிகள் வரும். அதற்கே, ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்த காலம் உண்டு.
ஆனால், இப்போது, குடும்பத்தோடு பார்க்கும் டி.வி. சீரியல்களிலேயே மது அருந்துவதாக வரும் காட்சிகள் சர்வசாதாரணமாகி விட்டன.
தீய சேர்க்கையால் வளர் இளம் பருவத்தினர் 13, 14 வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
விருந்தாளியாக வீட்டுக்குள் நுழையும் மது, நாளடைவில் மோசமான எஜமானனாகி, குடும்பத்தையே நாசமாக்கி விடுவதை பல வீடுகளில் காணமுடிகிறது.
கிருமிகளைவிட வேகமாக, தமிழகத்தில் போதைக் கலாசாரம் பரவி வருகிறது.
"எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்..!' என்ற மனோபாவத்தில், வருமானம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு, காணும் இடமெல்லாம் மதுக் கடைகளைத் திறந்துவிட்டு போதைப் பிரியர்களை அரசு குஷிப்படுத்தி வருகிறது. இரவானாலே, இவர்களின் தள்ளாட்டத்தால் பெண்களும், அப்பாவிகளும் வீதிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.
1983-84-ல் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் | 139 கோடி. இப்போதைய நிலவரப்படி 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த நிதி, அரசின் திட்டங்களுக்குத் திருப்பி விடப்பட்டாலும், இந்த அசுர வளர்ச்சியை தமிழனின் சாதனை என்பதா..? வேதனை என்பதா..?
பட்டி தொட்டியெங்கும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேலான மதுக்கடைகள் திறக்கப்பட்டு ஏழை பாட்டாளிகள் குடித்தே அழிந்து கொண்டிருக்கின்றனர்.
"குடிப்பழக்கம் ஒரு நோய்' என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மனிதனை மெல்ல, மெல்லக் கொல்லும் ஆட்கொல்லி விஷம்தான் "மது' என்பது நிரூபணமாகி விட்டது.
"பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிருந்தா என் பெண்ணைக் கொடுத்தே இருக்க மாட்டேனே..!' என எத்தனையோ வீடுகளில் புலம்பல் சத்தங்கள் கேட்கின்றன.
ஏழைகள்.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மதுக்கடைகளுக்கே செல்வதால், அபலைப் பெண்கள் குழந்தைகளுக்குச் சத்தான உணவைத் தரமுடியாமல் தவிக்கின்றனர்...!
கணவன்மார்களின் போதைப் பழக்கத்தால் அவர்களது வளர்ச்சி முடங்கிப் போய், கடைசிவரை ஏழ்மைக் கோட்டைத் தாண்ட முடியாமலேயே போய்விடுகிறது. அந்த அளவுக்கு "மது' மனிதனின் பகுத்தறிவை இழக்கச் செய்து தரித்திரத்தில் ஆழ்த்திவிடுவதை, சரித்திரத்தில் இடம்பெறத் துடிக்கும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்..!
ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்துவிட்டு "குடி குடியைக் கெடுக்கும்',"மது வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு' போன்ற சம்பிரதாயமான எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைத்தால் மது அருந்துவோர் ஒருபோதும் திருத்தப் போவதில்லை.
குடித்துக் குடித்தே உடல்நலம் குன்றி, அவர்கள் மயானத்துக்குப் போகும்வரை, அரசின் வருமானத்துக்கும் குறைவிருக்கப் போவதில்லை.
"சமூகத்துக்கு பெருந்தீங்கை விளைவிக்கும் மதுக்கடைகளை மூடுக' என உரத்துக் கோஷம் எழுப்பிய ஓர் அரசியல் கட்சியும் எதிர்காலக் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அமைதியாகி விட்டது.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகளால் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டும் ஆட்சியாளர்கள் தரப்பில் கனத்த மெüனமே நீடிக்கிறது.
"படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்..!' என எப்போதோ வெளியிடப்பட்ட அறிவிப்பையடுத்து, மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடப்பட்டன. ஆனால், மற்றொருபுறம் ஏராளமான பார்கள் திறந்துவிடப்பட்டு நள்ளிரவைத் தாண்டியும் மது கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் சில ஆயிரம் ஊழியர்கள் எங்கே போவார்கள்..? என்ற ஆதங்கம் இருக்கட்டும்..!
ஆனால், மதுக்கடைகளை மூடாவிட்டால் போதையில் சீரழியும் லட்சக்கணக்கான மனிதர்களால் நாதியின்றி வீதிக்கு வரப்போகும் தாய்மார்களும், குழந்தைகளும் எங்கே போவார்கள்..?
இதை உணர்ந்தாவது, தமிழகத்தைப் போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க வெகுசீக்கிரமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி.தினமணி நாளிதழ்,

மனசாட்சி பேசக்கூடாதா.?

மனசாட்சி பேசக்கூடாதா?

சா.ஜெயப்பிரகாஷ் First Published : 10 Aug 2010

தமிழ்நாட்டிலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் ஓராண்டுச் செலவு (சம்பளம், படிகள், சலுகைகளுக்காக) என்ன தெரியுமா? ரொம்பவும் அதிகம் இல்லை, 12 கோடியே 60 ஆயிரம்தான்.
திருச்சியைச் சேர்ந்த என். மணி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுப் பெற்றதால் கிடைத்துள்ள விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. மாத ஊதியம் - 8,000, ஈட்டுப்படி- 7,000, தொகுதிப்படி- 5,000, தொகுப்புப் படி- 2,500, தொலைபேசிப்படி- 5,000, அஞ்சல் செலவுப்படி- 2,500, வாகனப்படி- 20,000. ஆக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதத்துக்கு மொத்தம் 50,000.
இத்துடன், எம்.எல்.ஏ. விடுதியில் சலுகைக் கட்டணமாக நாளொன்றுக்கு 2.50 அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு சலுகைக் கட்டணத்தில் மாதம் ஒன்றுக்கு 250 மட்டுமே. உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துகள் வாங்கியதாக ரசீது கொடுத்தால், அந்தத் தொகை எம்.எல்.ஏ.க்களுக்கு திரும்பக் கிடைக்கும்.
நாளொன்றுக்கு படி 500. முக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவி, பேருந்துகளில் உதவியாளர் ஒருவருடன் இலவசப் பயணம், மேலும் பயணப்படியாக ஓராண்டுக்கு 20,000, இலவச எழுது பொருள்கள் இன்னும் என்னென்னவோ...
தமிழகத்திலுள்ள 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து சராசரியாக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் சலுகைகளாக ஒரு மாதத்துக்கு ஒரு கோடியே 50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ஆண்டுக்கு 12 கோடியே 60 ஆயிரம்.
எப்படி வளர்ந்தது தெரியுமா? கடந்த 1964 மார்ச் 31-ம் தேதி வரை எம்எல்ஏக்களுக்கு சம்பளம் வெறும் |150 மட்டும்தான். வேறெந்தப் படிகளும் கிடையாது. அந்த ஆண்டு சம்பளத்தில் 100 உயர்த்தப்பட்டு, 1971 அக்டோபர் 1-ம் தேதி முதல் ஈட்டுப்படியாக |100 சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் இந்தப் படிப்படியான இமாலய வளர்ச்சி. இப்போதைய "ஈட்டுப்படி' 7,000.
1978 முதல் தொடங்கப்பட்ட "தொலைபேசிப்படி' | 150, இப்போது | 5,000 ஆகியிருக்கிறது. 1991 முதல் தொடங்கப்பட்ட "தொகுதிப்படி' 250, இப்போது 5,000 ஆகியிருக்கிறது. 1993-ல் தொடங்கப்பட்ட "அஞ்சல்படி' 250, இப்போது 2,500 ஆகியிருக்கிறது. 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "தொகுப்புப் படி' 2,000, இப்போது | 2,500 ஆகியிருக்கிறது. 2007-ல் தொடங்கப்பட்ட "வாகனப்படி' 5,000, இப்போது 20,000 ஆகியிருக்கிறது.
மொத்தத்தில் 1964, மார்ச் 31-ம் தேதி வரை மாதம் |150 வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், 45 ஆண்டுகளில் "எல்லா வளர்ச்சியும்' பெற்று இப்போது தலா 50,000 பெறுகிறார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு "நிதியை முழுமையாகப் பயன்படுத்தாத எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை' என்று பதில் வந்திருக்கிறது. நிதியேதும் நிலுவையில் இருந்தால், மாவட்ட ஆட்சியர்களே நேரடியாகத் தகவல் சொல்லி, கடிதம் கேட்டுப் பெற்றுக் கொண்டு எடுத்துக் கொள்வார்களாக இருக்கும்.
ஆனால், இந்தத் திருநாட்டில்தான் "எக்ஸிகியூட்டிவ்' நிலையில் பணியில் இருப்பவர்களும்கூட 10,000 ஊதியம் என்பதைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளம் ஆசிரியர்களுக்கு ஊதியம் இன்னமும் ஆறாயிரம் ரூபாயைத் தாண்டவில்லை.
உலகப் போட்டியில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்திக்கு மாதம்தோறும் 5,000தான் ஊதியம். "தாற்காலிகப் பயிற்சியாளர்' என்பது அவரது பதவியின் பெயர். அவரால் உருவாக்கப்பட்டுள்ள வீரர்களின் மதிப்பு? உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளருக்கு மாதம்தோறும் | 6,000.
ஓர் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதி இறந்த திருச்சி செந்தில்குமாருக்கு அரசு உதவி எதுவுமில்லை!
இன்னும்கூர்ந்து கவனித்தால் இந்தப் பட்டியல் நீளும். ஆனால், அதேநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், சென்னையில் வீட்டுமனை... இத்யாதி இத்யாதிகளுடன் இன்னும் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். தொகுதி மக்களை அந்தப் பேரவையில் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான். இங்கே குறிப்பிட்ட சில பிரச்னைகளையும்கூட அவர்கள் பேரவையில் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.
சொந்த வீடில்லாத, எந்தவித சொத்தோ, வருமானமோ இல்லாத மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பாளர் மனுவிலேயே பதிவு செய்திருப்பதுபோல லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் கொடுப்பானேன். சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியில் அவர்கள் ஈடுபடட்டுமே... இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுவதுபோல, அவர்களது மனசாட்சியும் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நன்றி..தினமணி நாளிதழ்.10.8.2010

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.!


















ஈரோடு சன் டி.வி செய்தியாளர் மீது தாக்குதல்.!

கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய வன்முறைத் தாக்குதலில்,ஈரோடு பகுதியின் சன் டி.வி.செய்தியாளர் குணசேகரன் கடந்த 3.8.10.அன்று இரவு,கடுமையாகத் தாக்கப்பட்டார்.படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தைக் கண்டித்து,தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முhவட்டத்தலைவர் பா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,மாநில அமைப்புச் செயலாளர் பிரபாகரன்,மாநில இணைச்செயலாளரும்,தேசியக்குழு உறுப்பினருமான கொழுமம் தாமோதரன்,மாவட்டத் துணைத்தலைவர் ஏ.அக்பர்,சன் டிவியின் மாவட்ட செய்தியாளர் அவினாசிலிங்கம் உட்பட பலர் கண்டண உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பொற்காலம்இதழின் செய்தியாளர் ராஜா,செய்தியாளர்களின் மீது வன்முறை தாக்குதலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சட்டரீதியான அங்கீகாரத்தை ரத்து செய்யும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அவரின் இக்கருத்து செய்தியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொள்ளாச்சி சன் டிவி செய்தியாளர் அக்பர் பேசும்போது, செய்தியாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் எந்த அமைப்பானாலும், அவர்கள் தொடர்பான செய்திகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

தேசியக்குழு உறுப்பினர் தாமோதரன் பேசும்போது,வன்முறை எந்த அமைப்பின் சார்பில் வந்தாலும் அதனைத் தட்டிக்கேட்கவும்,செய்தியாளர்களின் உரிமையில் தலையிடும் யாராயிருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும்,அரசு வழிகாட்டி,சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கேப்டன் டி.வி செய்தியாளர் மருதாச்சலம், மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் மார்ட்டின்,இண்டியா ரேடியோவைச் சேர்ந்த வெங்கடபதி,தாமரைச் சந்திரன் உட்பட முன்னனி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் 50.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு,செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி தமிழகஅரசை வலியுறுத்தியும்,கொ.மு.க.விற்கு கண்டணம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

vedios in 'youtube'-tag- pollachi fourth estate-5.8.10