அரசுமருத்துவமனையை விரிவாக்கம் செய்ய
அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை.!
கோவைமாவட்டம் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதையொட்டி, இம்மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு,இங்கு மருத்துவக் கல்லூரியையும் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் சார்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை தெற்குமாவட்டத்தில் பொள்ளாச்சி அரசுமருத்துவமனை மட்டுமே தற்போது மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.இதன்மூலம், பொள்ளாச்சி, உடுமலை,வால்பாறை,கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.நாள்தோறும் 2 ஆயிரம் நோயாளிகள் வரை இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால்,இம்மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீனவசதிகள் எதுவுமில்லாததால்,சாதாரணமான சில நோய்கள் தவிர,விபத்து, சிக்கலான பிரசவம்,உள்ளிட்ட பெரும்பாலான சிகிச்சைகளுக்கு,கோவை அரசுமருத்துவமனைக்கே பரிந்துரை செய்யப்படுகிறது.இதனால் அரசுமருத்துவமனையை நாடிவரும் ஏழைநோயாளிகள்,பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை தொடர்ந்துவருகிறது.
இதனையடுத்து,பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில்,நவீனகருவிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்ததையடுத்து இம்மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு,கடந்த மேமாதம் அரசுஆணை வெளியிடப்பட்டது.
அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் இடவசதி தேவைப்படும் நிலையுள்ளதால்,தற்போது இம்மருத்துவமனை யின் அருகில் செயல்படாதநிலையில் உள்ள,சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான நகராட்சி மகளிர்மேல்நிலைப் பள்ளிவளாகத்தையும்,இதன் அருகிலேயே முக்கால் ஏக்கர் பரப்பளவிலான பாலகோபாலபுரம் பள்ளிவளாகத்தையும் இணைத்து,அரசு மருத்துவமனைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்பட்டு,மாவட்டத் தலைமை மருத்துவமனையாக,பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்படும் நிலை ஏற்பட்டால்,500 படுக்கைவசதிகளுடனும்,சி.டி.ஸ்கேன்,விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு,எலும்பு,நரம்பியல்,கண்,காது,மூக்கு தொண்டைப்பிரிவு,மகப்பேறுக்கு முன் மற்றும் பின்கவனிப்பு மருத்துவப்பிரிவு,இருதயநோய்,லேப்ராஸ்கோப்பிக்குடன் கூடிய நவீன அறுவைசிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட 30.க்கும் மேற்பட்ட சிறப்புமருத்துவப்பிரிவுகளுடன் இம்மருத்துவமனை செயல்பட வாய்ப்புள்ளது என்றும்,அரசுமருத்துவக்கல்லூரியாக இயங்க வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,வணிகவளாகம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.நகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,பொதுமக்களின் நலன் கருதி,இதனை நிறுத்திவைக்கவேண்டும் என்றும்,மாவட்டத்தலைமை மருத்துவமனையாக மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகஅரசு முன்வரவேண்டும் என்பதே, அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்,தொழில் வர்த்தகசபை,வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
